நாட்டில் மதுபானசாலைகளைத் திறப்பதற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
எனினும் நிதி அமைச்சிலிருந்து மதுவரித் திணைக்களத்துக்கு உத்தியோகப்பற்றற்ற வகையில் வந்த உத்தரவை அடுத்தே நாடு முழுவதும் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபானசாலைகளை திறக்கும் விவகாரம் குறித்து நிதி அமைச்சுக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்ததாக மதுவரித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுக்கடைகளை மீண்டும் திறக்க நிதி அமைச்வே அதிகாரப்பூர்வமற்ற ஒப்புதலை அளித்துள்ளது. எனினும் இது குறித்த எழுத்துமூல உத்தியோகபூா்வ அறிவித்தல்கள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து முறையான முடிவு எடுப்பதற்கு முன்பே சில ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மதுபான சாலைகள் முன்பு ஏராளமனவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவைக் கொள்வனவு செய்தனர். அத்துடன், மதுபான சாலைகள் முன்பான பொலிஸாரும் நின்று பாதுகாப்பு வழங்கினர்.
இதற்கிடையில் மதுவரித் திணைக்கள உரிமம் பெற்ற வைன் விற்பனை நிலையங்கள் (FL 04 உரிமம்) மற்றும் பியர் மற்றும் வைன் கடைகள் ( FL 22 B உரிமம்) கொண்ட மதுக்கடைகள் திறக்க முறைசார அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்று அனைத்து வகை மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை